என்னை அழவைத்துப் பார்த்த அனைத்தும், என் மனதுக்கு மிக நெருக்கமான பிடித்தமான ஒன்றாகத்தான் இன்று வரை இருந்து வருகிறது.... அம்மா, அப்பா, அண்ணாமலையார், ஸ்கூல், நட்பு, அரியர், பியர், வேலை என்ற வரிசையில் விமானத்துக்கும் இடமிருக்கிறது....
கிராமத்தில் துவையல், ஊறுகாய், குழம்பு என்று பழகிய பையனை மொத நாள் காலேஜ் மெஸ்ஸுல உக்கார வச்சு சட்னி வேணுமா சாம்பார் வேணுமான்னு கேக்கற மாதிரி இருந்தது எனக்கு..... இடம்: சென்னை உள்நாட்டு (நல்லவேளை ) விமான நிலையம், எனது முதல் விமானப் பயணம்.....
எங்க அப்பா அம்மாகிட்ட "நீங்க சுத்தி அந்த பக்கமா வாங்க, நான் இந்த பக்கமா செக்கின் பண்ணிட்டு வந்து உங்கள பாக்கறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற நான், போர்டிங் முடிஞ்சு உள்ளே சென்றுவிட்டதுதான் காரணம்.
அங்க இருந்த ஒரு புத்தகக் கடை சேல்ஸ் கேர்ள் கிட்ட இங்க விசிட்டர்ஸ் லௌஞ்ச்க்கு எப்படி போகனும் என்று கேட்டதுக்கு, "சார் நீங்க போர்டிங் ஆகி உள்ள வந்துட்டீங்க. இனிமே வெளிய போக முடியாது" ன்னு சொல்லிச்சு.
செக்கின் எது போர்டிங் எதுன்னே தெரியாம டாமி கூலர்ஸ், காதுல ஐ பாட் வேற....
போனா 3 மாசம் கழிச்சுதான் திரும்ப வர முடியும் என்கிற நிலைமையில், முதல் நாள் ஸ்கூலுக்கு குழந்தையை அனுப்பிட்டு காத்திருக்கும் மனநிலையில் வெளியே அம்மா.....
அப்பாவுக்கு போன் போட்டு நடந்ததைச் சொன்னேன்... எங்க அம்மா அதைக் கேட்டுவிட்டு "அய்யயோ பையன ஒழுங்கா கூட பாக்கலைங்க" என்று கத்தியதும், எனக்கு குரல் உடைந்துவிட்டது.... "சார், இங்க பாத்ரூம் எங்க இருக்கு" என்று யாரையோ கேட்டேன்... கடைசி இரண்டு வார்த்தைகள் அழுதுகொண்டே தான் கேட்டேன்.....
போனிலேயே அழுது, பேசி, முத்தமிட்டு சமாதானம் ஆன பிறகு ஒரு தெளிவு வந்தது..... தேயிலைத் தோட்டங்களைப் பார்த்துக்கொண்டே ஹில்வியூ காட்டேஜ் லானில் அமர்ந்து ஸ்ட்ராங் காபி குடிப்பதைப் போல....
வெளியே வந்து பார்த்தால் பலவிதமான பயணிகள், விமான நிலையத்தின் வழக்கமான அதிசயங்கள்... அழகான பெண்கள்... எதிலும் ஆர்வமில்லாமலிருந்தது...
விமானம் ஏறி, ஜன்னலோரம் அமர்ந்து, டேக்ஆபில் சிலிர்த்து, சிறகில்லாமல் பறந்து, காதடைத்து, போட்டோ எடுத்து, ஸ்வீட்டி ரதோரிடம் காபியும் முந்திரியும் வாங்கி சுவைத்த பின்பு கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது.....
பயணம் முடிந்து அகமதாபாத் சென்று குஜராத்தி பெண்களைப் பார்த்த பிறகுதான் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது...... ஏரோப்ளான்னா சும்மாவா??